சற்று முன்



லோக்கல் சரக்கு’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு !

ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்த தயாரிப்பாளர்கள் தான் காரணம்! - ‘லோக்கல் சரக்கு’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு !

உதயநிதியுடன் நடிக்க முடியாமல் போனது ஏன்? - ‘லோக்கல் சரக்கு’ பட விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறிய சுவாரஸ்ய தகவல்

மது பழக்கத்தால் பல கோடி குடும்பங்கள் கஷ்ட்டப்படுகிறார்கள் - ’லோக்கல் சரக்கு’ விழாவில் வருத்தம் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார்

”நடிகர் சித்தார்த் வெறும் பேப்பர் புலி” - ‘லோக்கல் சரக்கு’ பட விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் காட்டம்

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி பேசுகையில், “’லோக்கல் சரக்கு’ படத்தின் தலைப்புக்காகவே தயாரிப்பாளர் ராஜேஷ் அதிகமாக போராடினார். காரணம், அரசு மதுபானக்கடைகளை நடத்துவதால் அதற்கு எதிராக இருக்கும் என்று இந்த தலைப்பை கொடுக்கவில்லை. பிறகு இந்த படத்தின் கதையை சொல்லி, இது குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கும், என்று புரிய வைத்த பிறகே இந்த தலைப்பு கிடைத்தது. தயாரிப்பாளராக மட்டும் இன்றி இந்த படத்திற்கு இசையமைத்ததும் ராஜேஷ் தான். அவர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக பணியாற்றியவர். அதனால், இந்த படத்திற்கு சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே மற்றொரு படத்தையும் ராஜேஷ் தொடங்கி விட்டார், அந்த படமும் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

திரைப்படங்களின் தலைப்பு மக்களிடம் சென்றடைந்து விட்டாலே அது பாதி வெற்றி பெற்றதற்கு சமம். அந்த வகையில், இந்த படத்தின் தலைப்பான ‘லோக்கல் சரக்கு’ மக்களிடம் சென்றடைந்து விட்டது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் படங்களுக்கு கூட தலைப்பு வைப்பதில் அதிகம் மெனக்கெடுகிறார்கள், அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பு மக்களை எளிதில் சென்றடைந்து விட்டது. காரணம், தற்போதைய காலக்கட்டத்தில் 70 சதவீதம் பேர் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதுவும், இளைஞர்கள் அதிகம் பேர் மதுப்பிரியர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தில், மதுவை மையமாக வைத்து ஒரு நல்ல கதையை சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு நல்ல கருத்து சொல்வது மட்டும் அல்லாமல் அதை நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள். யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாரும், பல முன்னணி காமெடி நடிகர்களுக்கு காமெடி ட்ராக் எழுதியவர் மட்டும் அல்ல விஜய், மம்மூட்டி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார் என்பதால், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், நன்றி.” என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் செளந்தரராஜன் பேசுகையில், “’லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பே ஈர்ப்பாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா பேசுகையில், “சரக்கு அதிகம் அடித்தால் ஹாங்கோவர் ஆகிவிடும், உடனே மறுநாள் சரக்கடிப்பார்கள், அதுபோல இந்த படத்தை பார்க்கும் போதும் ஹாங்கோவர் ஆவது போல் மக்கள் திரும்பி திரும்பி இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது, அமைச்சர் ஒருவர் சமீபத்தில் ஊடகங்களில் பேட்டியளிக்கும் போது, மதுக்கடைகளை சீக்கிரம் திறக்க வேண்டும் என்றும், கடை காலதாமதமாக திறக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார். இப்படி அவர் சொன்னதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். ’லோக்கல் சரக்கு’ என்ற ஒரு தலைப்பு வைப்பதற்காகவே தயாரிப்பாளர் எப்படி அலைந்தார் என்று எங்களுக்கு தெரியும். இந்த தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கம் சாதாரணமாக கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, ஒரு அமைச்சர் ஏதோ தமிழ்நாட்ல இருக்குற அனைத்து தொழிலாளர்களும் ஏதோ சரக்கு அடித்துவிட்டு வேலைக்கு போவது போல் பேசினார், அதையும் மக்கள் பார்த்தார்கள். இந்த படம் இந்த அரசங்காத்திற்காக எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த லோக்கல் சரக்கால் மக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுகிறார்கள், என்பதை சொல்கின்ற படம். இந்த படத்தை நண்பர் ராஜேஷ் தான் தயாரித்தார். ஆனால், வெளியிடும் போது அவர் எப்படி எல்லாம் சிரமப்பட்டார் என்பதை நான் பார்த்தேன். அவருக்கு உதவி செய்யும் விதமாக வந்தவர் தான் வினோத் சார். அவர் ராஜேஷுக்கு கை கொடுத்து அவரை தூக்கி விட்டிருக்கிறார். அவரை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், அவர் மேலும் பல படங்கள் தயாரிக்க வேண்டும். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ராஜேஷ், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர், அவர் திறமையான இசையமைப்பாளர். ராஜேஷ் படம் தயாரிக்கும் போது, நான் எப்படி தயாரிக்கப் போவதாக கேட்டேன், காரணம், தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தயாரிப்பது சவாலான காரியம். அதை ராஜேஷ் சிறப்பாக செய்திருக்கிறார், ஆனால், வெளியிடும் போது கஷ்ட்டப்பட்டு விட்டார். அதனால், ஒரு தொழில்நுட்ப கலைஞன் தயாரிப்பாளராக வரக்கூடாது என்பதே என் எண்ணம். இருந்தாலும், ராஜேஷ் இந்த படத்தை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறார். இதேபோல் அவர் பிற தயாரிப்பாளர்களுக்கும் சரியான பட்ஜெட்டில் படங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகி உபாசனா பேசுகையில், “இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இது காமெடி ஜானர் படம் என்று சொன்னதோடு, காமெடி ஜானர் படத்தில் எப்படி மெசஜ் சொல்ல முடியும் என்று கேட்டார்கள். ஆனால், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். காமெடி படமாக இருந்தாலும் அதில் நல்ல மெசஜை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக படங்களில் ஹீரோவுக்கு தான் பலமான வேடம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பலம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட தினேஷ் மாஸ்டருக்கு நன்றி. நாங்க எல்லோரும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை பண்ணியிருக்கோம். அதனால், நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் சார், ராஜேஷ் சாருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பேசுகையில், “இங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தெரியும், ‘லோக்கல் சரக்கு’ படம் தொடர்பாக இதுவரை பத்து விழாக்கள் நடந்திருக்கும். ஆனால், இன்று நடக்கும் விழா மிகவும் முக்கியமானது. இது வெளியீட்டுக்கான விழா. படத்தை பார்த்துவிட்டு ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லி வினோத் சார் படத்தை வாங்கி விட்டார். எனவே, படம் விரைவில் வெளியாக உள்ளது. வினோத் சார் மிகவும் நேர்மையானவர், அவர் படத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு செய்த ஒவ்வொரு விஷயமும் நேர்மையாக இருந்தது. அவருக்கும், என் குடும்பத்தினருக்கும் நன்றி. ஏன் இந்த படம் வெளியாக காலதாமதம் ஆனது என்று யோசிப்பீர்கள். ஆனால், படத்தை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள், அந்த அளவுக்கு படம் வந்திருக்கு. படத்தில் நடித்த தினேஷ் மாஸ்டர், யோகி பாபு, உபாசனா ஆகியோருக்கு நன்றி. 

வினோத் சார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார், அதுபோல் படத்தில் நடித்த நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது இந்த படத்திற்கு மட்டும் அல்ல, இதுபோன்ற சிறிய படங்கள் அனைத்துக்கும் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் அது படத்திற்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். என் அடுத்த படமான ‘கடைசி தோட்டா’ படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. படம் முடியும் தருவாயில் உள்ளது, அந்த படம் குறித்த நிகழ்ச்சிகளும் விரைவில் நடைபெறும்.

இந்த படம் மட்டும் அல்ல, என்னுடைய இசை ஆல்பங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் என்னுடன் உறுதுணையாக பயணிக்கும் மக்கள் தொடர்பாளர் கிளாமர் சத்யா சாருக்கும் நன்றி. அவரால் எது முடியும், எது முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறார். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்து பார்த்தால், முடியாது என்று சொன்ன விசயங்களை கூட செய்துவிடுவார், அவருக்கு என் குடும்பம் சார்பாக நன்றி. வனிதா அக்காவுக்கும் நன்றி. எங்கள் படம் ’கடைசி தோட்டா’-வின் முக்கியப்புள்ளி அவங்க தான். வரலாற்று சரித்திர கதை கொண்ட பிரமாண்டமான தெலுங்குப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்காங்க. அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுகிறது. ஆனால், எங்கள் படத்திற்காக அங்கு செல்லாமல் இங்கு வந்திருக்கிறார். எங்கள் படத்தை முடித்துக்கொடுத்து விட்டு தான் செல்வதாக சொன்னார், அவருக்கு மிகப்பெரிய நன்றி.” என்றார்.

நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக என்னை சந்தித்தார். அப்போது ‘கடைசி தோட்டா’ படத்தை பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்தேன். ஆனால், உள்ளே வந்த பிறகு தான் ‘லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்தேன். சரக்குக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை. இதுவரை என் வாழ்வில் ஒரு துளி கூட மதுவை அருந்தியதில்லை, அதேபோல் சிகரெட் புகைத்தது இல்லை. இரண்டு படங்களில் மட்டும் மது குடிப்பது போல் நடித்தேன், பிறகு அது கூட தேவையில்லை என்று விட்டுவிட்டேன். நமக்கு பழக்கம் இல்லாத விசயங்களை பெரிய திரையில் எதற்காக செய்ய வேண்டும், அதை பார்த்து இரண்டு பேர் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதை விட்டுவிட்டேன். சினிமாவில் எப்படி என்றால், 13 ரீல் வரை அனைத்தையும் காட்டிவிட்டு, ஒரே ஒரு ரீலில் இதெல்லாம் தப்பு என்று மெதுவாக சொல்வார்கள். அப்படி இல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல கூடிய ஒரு படமாக இந்த படம் இருக்க வேண்டும். அதே போல், தம்பி தீனா சொன்னது போல், ஹாங்கோவராகி மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும், அதே சமயம் ஹாங்கோவர் ஆகி தியேட்டரிலேயே தூங்கி விடாமலும் இருக்க வேண்டும்.

ஊடகத்தினர் தான் இதுபோன்ற படங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற சிறிய படங்களுக்கு தயாரிப்பாளர் தான் அனைத்துக்கும் பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.  எனவே இதுபோன்ற படங்களுக்கு ஊடகங்கள் தான் உதவி செய்ய வேண்டும். இந்த தலைப்பு வாங்கவே ராஜேஷ் ரொம்ப கஷ்ட்டப்பட்டார் என்று சொனார்கள். சரக்கு வாங்கவே இங்கு கஷ்ட்டம் தான், அப்படி இருக்க தலைப்புக்கு ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்காங்க. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, அந்த பொழுதுபோக்கு அடுத்தவங்களை பாதிக்காதபடி இருக்க வேண்டும், அது தான் நல்ல படம். ஆனால், எந்த காலத்திலும் நெறிமுறைகளை நாம் விடக்கூடாது. பள்ளி மாணவர்களிடையே சாதி சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் பயங்கரமாக இருக்கிறது. இதற்கு சினிமாவும், அரசியலும் ஒரு காரணமாக இருப்பது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவன் தாயையும் பார்க்கும் போது ரொம்ப கஷ்ட்டமாக இருக்கிறது. சாதியை தூக்கி பிடித்து படம் எடுப்பவர்கள், அந்த படத்தின் லாபத்தில் ஒரு தொகையை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கொடுங்க, அது தான் உண்மையான சேவை, அதை விட்டுவிட்டு, அவனுக்கும் இவனுக்கும் சண்டை, என்று படம் எடுத்துவிட்டு, நீங்க பணம் சம்பாதிப்பது சரியா?

சினிமாவில் இருக்கும் 25 கிராப்ட்களுக்கும் பணம் கொடுப்பது தயாரிப்பாளர் தான், ஆனால் அவர் தான் அனைவரும் சொல்வதை கேட்க வேண்டும், அப்படி இருந்தால் அவரால் எப்படி ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும், உங்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர் பாக்கெட்டில் பணம் வருவதற்கு நீங்கள் ஒன்று சேர்ந்து உழைத்திருக்கிறீர்களா?, அப்படி உழைத்தால் சினிமா நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நடிகர் சித்தார்த் படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமானேன், அதற்காக அட்வான்ஸை தயாரிப்பாளர் கொடுத்து விட்டார், தேதியும் ஒதுக்கி கொடுத்து விட்டேன். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர், அந்த படத்தில் நான் இல்லை என்று சொல்லிவிட்டார். காரணம் கேட்டதற்கு, அந்த படத்தின் நாயகன் சித்தார்த் தான் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு, நான் பா.ஜ.க-வை சேர்ந்தவன் என்றும், அவர் மோடி எதிர்ப்பாளர், நாங்கள் ஒன்றாக நடித்தால் மக்கள் அவரை ட்ரால் செய்வார்கள் என்று சொன்னாராம். சோசியல் மீடியாவில் வீரமாக பதிவுகளை போடும் சித்தார்த்துக்கு தைரியம் இல்லை. சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு அதை புரிந்துக்கொள்ளாத சித்தார்த் வெறும் பேப்பர் சிங்கம், பேப்பர் புலி. இதற்கு எதிர்மாரான மற்றொரு சம்பவமும் நடந்தது. உதயநிதி ஹீரோவாக நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் என்னை நடிக்க இயக்குநர் அனுகினார். அப்போது அவரிடம், நான் பா.ஜ.க, அவர் திமுக, நான் நடிப்பது அவருக்கு சம்மதமா? என்று அவரிடம் கேளுங்க என்றேன். அதற்கு அவர், ”உங்களோடு இணைந்து நடிப்பதில் உதயநிதி சாருக்கு சம்மதம்,  நீங்க என்ன சொல்வீங்க என்று தான் அவர் கேட்க சொன்னார்” என்று சொன்னார். இது தான் நெறிமுறை. அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, அதற்கு இயக்குநர் தான் காரணம். நான், இது தொடர்பாக நடிகர் சித்தார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறேன், அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

‘லோக்கல் சரக்கு’ நிச்சயம் வெற்றி பெறும். யோகி பாபுவின் காமெடிகள் சிறப்பாக வந்திருக்கிறது. தினேஷ் மாஸ்டர், உபாசனா உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும்.” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “எனக்கு எப்போதும் ஊடகத்தினர் ஆதரவு அளித்து வருகிறார்கள், நான் நடித்த அநீதி படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தீங்க நன்றி. ‘லோக்கல் சரக்கு’ படத்தை தயாரித்த ராஜேஷ், வினோத் குமாருக்கு கொடுத்திருக்கிறார். ராஜேஷ் நல்ல தயாரிப்பாளர் என்பது எனக்கு தெரியும். அவருடைய ’கடைசி தோட்டா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இன்று சினிமாவுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க கூடிய குழுவை கொண்டவர் ராஜேஷ் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நான் இன்று தான் தெரிந்துக்கொண்டேன். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நன்றாக இருந்தது. இன்றைக்கு இருக்க கூடிய லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ற பாடல்களாக இருந்தது. படத்தின் டிரைலர் பார்க்கும் போது, சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’, ‘குட் நைட்’, ‘டாடா’ போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் போல் இருக்கிறது. இந்த வெற்றி அனைத்து படங்களுக்கும் கிடைப்பதில்லை. காரணம், படத்தில் நடித்தவர்கள் சரியாக ஒத்துழைப்பதில்லை.

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் தான். யோகி பாபு, தினேஷ் மாஸ்டர், உபாசனா என அனைவரும் தெரிந்த முகங்கள் தான். அதேபோல் படத்தின் கதைக்களமும் எதார்த்தமானதாக இருக்கிறது. எனவே இந்த படம் முன்பு சொன்னது போல் சமீபத்திய வெற்றி படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும். லைப் ஸ்டைல் என்பது வேறு, பழக்கம் என்பது வேறு, எனவே எதையும் நம்மால் மாற்ற முடியாது. டெக்னாலஜி காரணமாக எதையும் நாம் தடுக்க முடியாது. அதனால் கெட்டுப்போறவங்க கெட்டுபோக தான் செய்வாங்க, அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர், அதற்கும் கீழே இருப்பவர்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால், எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அது எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், எனக்கு தனிப்பட்ட  வாழ்க்கை முறையிலும் தெரியும். எனவே மதுவால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக நன்றாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “தம்பி ராஜேஷ் திறமைசாமி, நல்ல இசை ஞானம் உள்ளவர். குறைந்த நாளில், குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை தயாரித்திருக்கிறார். நாங்கள் படம் பார்த்தோம், படம் சிறப்பாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் நிறைந்த படமாக இருக்கிறது. குடும்ப கதையை மக்களுக்கு பாடமாக சொல்லியிருக்கிறார்கள். லோக்கல் சரக்கால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. லோக்கல் என்றாலும் சரி, ஒரிஜினலாகா இருந்தாலும் சரி, எந்த சரக்காக இருந்தாலும் அது குடும்பத்தை கெடுக்கும். அதனால், மதுவை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டில் மட்டும் கேட்டு எந்த பயனும் இல்ல, இங்கு தடை பண்ணால் பாண்டிச்சேரி, பெங்களூர், ஆந்திராவுக்கு போகிறார்கள். ஆனால், நம் முதலமைச்சர் தடை பண்ணி, காவல்துறை மூலம் பாதுகாப்பை பலப்படுத்தினால், பல கோடி குடும்பங்களை காப்பாற்றலாம். அந்த விஷயத்தை மிக சிறப்பாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற படங்களை பார்க்கும் போது மகிழ்சியாக இருக்கிறது, மனதில் இருந்து வாழ்த்த தோன்றுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் தயாரிப்பாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. ஒரு படம் உருவாக பணம் போடுவது தயாரிப்பாளர் தான், ஆனால் அந்த படம் வெற்றி பெற்றால் கூட அவருக்கு எதுவும் கிடைப்பதில்லை. அந்த படத்தின் நாயகன் தான் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் டாடா என்ற படம் வெற்றி பெற்றது. உடனே அந்த ஹீரோ பின்னாடி தயாரிப்பாளர்கள் போகிறார்கள். ஒரு தயாரிப்பாளர் வந்ததும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். நான்கு தயாரிப்பாளர்கள் அவரை தேடி சென்ற உடன், தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி விடுகிறார். ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்த தயாரிப்பாளர்களும் ஒரு காரணம், இந்த நிலை மாற வேண்டும். இன்று எஸ்.வி.சேகர் விஷயத்திலும், அந்த நடிகர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ‘லோக்கல் சரக்கு’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை