சற்று முன்



சிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) !

சிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை  !


சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை தொடக்கநிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கம்  சிறுநீர்ப்பை புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு சமீபத்திய தொழில்நுட்பம் உதவுகிறது என்பதையும் இம்மருத்துவமனை வலியுறுத்துகிறது  .

Chennai, 30th May 2024: தமிழ்நாட்டின் முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் குழுமத்தின் ஒரு அங்கமான காவேரி மருத்துவமனை – ஆழ்வார்பேட்டை, “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற ஒரு ஓவிய கண்காட்சி நிகழ்வை தொடங்கியிருக்கிறது.  ஓவியம் / கலையின் வழியாக சிறுநீர் பையில் தோன்றுகின்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதே இந்நடவடிக்கையின்  நோக்கமாகும்.  இந்த ஓவிய கண்காட்சி நிகழ்வை மெர்க் ஸ்பெஷாலிட்டி பிரைவேட் லிமிடெட் – ன் ஒத்துழைப்போடு காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. 

யூரினரி ஃப்ளோரசன்ட் ஃப்ளோ சைட்டோமெட்ரி (UFFC) என அழைக்கப்படும் ஒரு மிக சமீபத்திய தொழில்நுட்பமானது, சிறுநீர் பையில் உருவாகும் புற்றுநோயை கண்டறிவதற்கு சிறப்பாக உதவுகிறது.  இந்த நவீன தொழில்நுட்பத்தினால் கிடைக்கக்கூடிய  ஆதாய அம்சங்களையும் காவேரி மருத்துவமனை வலியுறுத்தியிருக்கிறது.  சிறுநீரில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புற்று செல்களை இத்தொழில்நுட்பம் கண்டறிகிறது.  சிறுநீர் மாதிரியை சேகரிப்பது, சிறப்பு ஒளிரும் சாயங்களைக் கொண்டு செல்களில் நிறமேற்றும் முறை மற்றும் சிறுநீர் ஓட்ட சைட்டோமீட்டர் வழியாக அந்த செல்களை கடக்கச் செய்வது ஆகியவை இந்த செயல்முறையில் இடம்பெறுகின்ற பல்வேறு கட்டங்களாகும் ஒரு லேசர் ஒளிக்கற்றை வழியாக  இந்த செல்கள் செலுத்தப்படும்போது அவைகளின் பண்பியல்புகளின் அடிப்படையில், வெளிச்சத்தை அவைகள் உமிழ்கின்றன.  புற்றுசெல்கள் போன்ற இயல்புக்கு மாறான செல்களை அடையாளம் காண்பதற்கு இந்த இயந்திரம் ஒளியை அளவிடுகிறது.  புற்றுசெல்கள் பெரும்பாலும் பெரிய அளவிலும், இயல்புக்கு மாறான டிஎன்ஏ உள்ளடக்கத்தையும், குறிப்பிட்ட மேற்பரப்பு குறிப்பாண்களையும் கொண்டிருக்கின்றன.  சிறுநீரில் புற்றுநோய்க்குரிய செல்கள் இருப்பதை இந்த புதிய நவீன உத்தியானது, விரைவாகவும், விரிவாகவும் மற்றும் மிக துல்லியமாகவும் கண்டறிகிறது.  இந்தியாவில் இத்தொழில்நுட்ப சாதனத்தை வெகுசில மருத்துவ மையங்களே கொண்டிருக்கின்றன.  அத்தகைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற மருத்துவமனைகளுள் ஒன்றாக இருப்பதில் காவேரி மருத்துவமனை பெருமை கொள்கிறது.  

சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, உலகளவில் காணப்படுகின்ற 11-வது மிகப்பொதுவான புற்றுநோயாகும்.  இந்திய மக்கள் தொகையில் சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, ஒரு அரிதான, வேகமாகப் பரவக்கூடிய புற்றுநோய் வகையாகும்.  GLOBOCAN 2020 தரவுப்பேழையின்படி, இந்தியாவில் கண்டறியப்படும் 17-வது மிக அதிக புற்றுநோயாக சிறுநீர்ப்பை புற்றுநோய் இருக்கிறது.  ஒவ்வொரு 100,000 நபர்களில், 3.57 என்ற அளவில் புற்றுநோய் இருப்பதாக 5 ஆண்டுகால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் இப்புற்றுநோயினால், சுமார் 11000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.  இப்புற்றுநோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் கிடைக்கக்கூடிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வும் மற்றும் தொடக்கநிலையிலேயே இதனை கண்டறிவதும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.  

“சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான முக்கியமான இடர் காரணிகளாக புகைப்பிடித்தல், வேதிப்பொருட்களுக்கு வெளிப்படுதல், குடும்பத்தில் பிறருக்கு புற்றுநோய் இருந்த வரலாறு, நாட்பட்ட சிறுநீர்பை பாதிப்பு நிலைகள் ஆகியவை இருக்கின்றன.  இந்நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது.  ஆகவே, இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிக அவசியம்.  ஓவியம் மற்றும் கலை என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.  இச்செயல்திட்டத்தின் வழியாக, தொடக்க நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து கற்பிக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.  அத்துடன், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நம்பிக்கையும், ஆதரவையும் வழங்குவது இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.  சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை போன்ற பயனளிக்கும் பல்வேறு சிகிச்சை வழிமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதை முன்னிலைப்படுத்துவதும் இந்த ஓவியக் கண்காட்சி நிகழ்வின் நோக்கமாகும்.” என்று ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இயக்குனர் டாக்டர். A.N. வைத்தீஸ்வரன் கூறினார். 

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சி தொடக்கவிழா நிகழ்வில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவிய நிபுணரான கலைமாமணி திரு. டிராட்ஸ்கி மருது கலந்துகொண்டு சிறப்பித்தார்.  “விழிப்புணர்வையும், சிந்தனையையும் தூண்டி உத்வேகம் அளிக்கும் திறன் ஓவியத்திற்கும், கலைக்கும் இருக்கிறது.  சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஓவியக்கலையைப் பயன்படுத்தும் இந்த பாராட்டுதலுக்குரிய முயற்சியின் ஒரு அங்கமாக பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்தின் வழியாக சமுதாயத்தில் நல்ல விழிப்புணர்வு மேலும் பரவும் என்று நான் நம்புகிறேன்.” என்று திரு. டிராட்ஸ்கி மருது தனது உரையில் குறிப்பிட்டார். 

இக்கண்காட்சி நிகழ்வில் ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் ஓவியப்படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.  சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறும் சித்திரங்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றன. 

“புற்றுநோயைக் கண்டறியவும், உயர் சிகிச்சையை வழங்கவும் தேவையான நல்ல நிபுணத்துவத்தையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் கொண்டிருக்கிறது.  பல்வேறு செயல்தளங்கள் வழியாக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை நாங்கள் தீவிர முனைப்புடன் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறோம்.  ஒவியக்கலையை ஒரு வழிமுறையாக திறம்பட பயன்படுத்தும் இந்த நேர்த்தியான முன்னெடுப்பு திட்டத்திற்காக மெர்க் நிறுவனத்தோடு ஒத்துழைப்புடன் செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  புற்றுநோய் குறித்தும் மற்றும் பயனளிக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தொடக்க நிலையிலேயே அதை கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு இந்த ஓவியக் கண்காட்சி போன்ற முயற்சிகள் பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.


கருத்துகள் இல்லை