சற்று முன்



காளிதாஸ் 2' திரைப்பட இசை வெளியீட்டு விழா !


காளிதாஸ் 2' திரைப்பட இசை வெளியீட்டு விழா !


ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. 


இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது.., 


இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.


யோகேஷ்வரன் பேசியதாவது.., 


என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி. 



சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது.., 


“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.


தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது..,  


“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன். 


பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது..,  


மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 


‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.


இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.


தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது.., 


டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.


தயாரிப்பாளர் தாணு பேசியதாவது.., 


இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.


தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது.., 


செந்தில் சார் ஒரு பயங்கரமான hard-working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.


அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.


நடிகர் சாந்தனு பேசியதாவது.., 


இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.


இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார். 


அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent-ஆ, consistent-ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50-க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures-க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.


நடிகர் கலையரசன் பேசியதாவது.., 


‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.


பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.


சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire-ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி. 


ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,


‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”


இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது.., 


“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.


பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.


இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…., 


செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் - ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.


சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.


அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist-களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.


அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள். 


பா ரஞ்சித் பேசியதாவது..,  


செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.


நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.

இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். 

கருத்துகள் இல்லை