இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !
“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !
*“ஆகாஷ் எனக்கு தம்பி மாதிரி… ‘இதயம் முரளி’ அவரது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !!*
*”‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் - இயக்குநர் அட்லீ“*
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வினில்
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது..,
இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், “பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம்” என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.
அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, “ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அதர்வாவை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அதை இங்கே நேரில் பார்க்க முடிகிறது. ப்ரீத்தி, கயாது உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.
கார்த்திக், தமன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். நானும் தமனும் எங்கள் முதல் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு திரைப்படம். அதற்கு மேல் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. திரையரங்குகளில் சந்திப்போம். நன்றி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார் பேசியதாவது..,
முதலில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் பயணத்தில் நானும் அவருடன் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான அழகிய காதல் திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மக்கள் நிச்சயம் ரசித்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் அதர்வா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இடம்பெற்றுள்ளது. அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் மிகுந்த பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும், மனநிறைவு தரக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.
ஒளிப்பதிவாளர் சாய் பேசியதாவது..,
இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இந்தப் பயணத்தைப் பற்றி நாங்கள் சுமார் பத்து ஆண்டுகளாகப் பேசிக் கொண்டே இருந்தோம். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இன்று அந்தக் கனவு நனவாகி, ஜூலை 10-ஆம் தேதி படம் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஆகாஷ் முதலில் ஒரு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆனால் அவர் தயாரித்த திரைப்படம்தான் முதலில் வெளியாகிவிட்டது. அதில் எந்த வருத்தமும் இல்லை. நல்ல விஷயங்கள் நடைபெற சிறிது காலம் எடுக்கும் என்பார்கள். அதுபோல இந்தப் படமும் சரியான நேரத்தில் ரசிகர்களைச் சென்றடைகிறது ‘இதயம் முரளி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் டிராவிட் பேசியதாவது..,
முதலில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யூடியூபில் இருந்த என்னை நம்பி, இந்தக் கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்பு வழங்கியதற்கு அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நடிப்பைத் தாண்டி, ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகிறது, ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதையும் ஆகாஷ் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நடிகராக மட்டுமல்ல, சினிமாவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் படம் எனக்கு உதவியது.
‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களே பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த நட்பைப் பற்றி மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தில் நண்பர்களாக நாங்கள் நடித்தது இல்லை; இந்தப் படமே எங்களை உண்மையான நண்பர்களாக மாற்றிவிட்டது. இன்றும் நாங்கள் அனைவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஒருவருக்கொருவர் என்ன செய்கிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் படம் எங்களை இணைத்துள்ளது.
அதர்வா மிகவும் அன்பான மனிதர். திரையில் எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறாரோ, நிஜ வாழ்க்கையிலும் அதே அளவுக்கு அழகான குணம் கொண்டவர். ப்ரீத்தி முகுந்தன், கயாது உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் சுதாகர் அண்ணாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு புதிய கோணத்தில் இந்தப் படத்தில் பார்க்கப் போகிறார்கள்.
யூடியூபில் இருந்து திரைப்பட உலகிற்கு நான் வந்த பயணத்தில், ‘இதயம் முரளி’ மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷ் பாஸ்கரனுக்கும், படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை ஏஞ்சலின் பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்பதை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இன்று ‘இதயம் முரளி’ படக்குழுவின் ஒருவராக இந்த மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது.
ஒரு விஷயத்தை இதுவரை பெரிதாக எங்கும் பகிர்ந்ததில்லை. என் ஊடகப் பயணத்தில் நான் எடுத்த முதல் பிரபலத்தின் நேர்காணல் அதர்வாவுடன்தான். இன்று அவருடனேயே என் முதல் திரைப்படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது.
இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. காரணம், இதில் கிடைத்த நட்புதான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் எங்களுக்கு நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் நாங்கள் ஒரு அழகான பிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். பல இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் உருவாகியுள்ளது. குறிப்பாக, திரையில் எங்களுக்குள் இருக்கும் நட்பின் உணர்வு மிகவும் உண்மையாக வெளிப்பட்டிருப்பதை ரசிகர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
என் திரைப்பயணத்தைத் தொடங்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது என்று நான் உணர்கிறேன். இந்தப் படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் உங்களுக்குப் பிடித்த பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடன இயக்குநர் அனுஷா பேசியதாவது:
முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
திங்க் மியூசிக்குடன் எனக்கு நல்ல பயணம் அமைந்துள்ளது. ‘கட்சி சேரா’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, ஒரு வாரத்திலேயே நான் ஒப்பந்தமான முதல் திரைப்படம் ‘இதயம் முரளி’. அப்போது நான் யார், என் பணி என்ன என்பது கூட பலருக்குத் தெரியாது. இருந்தாலும் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய Dawn Pictures மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சிறப்பான காட்சிகளை உருவாக்கியுள்ளனர். அதர்வா, ப்ரீத்தி, கயாது, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் நான் நடன அமைப்பு செய்துள்ளேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து அந்தப் பொறுப்பை வழங்கிய படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றி.









கருத்துகள் இல்லை