சற்று முன்



சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் !

சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்' (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளிக்கிறது ! 

 சென்னை மணலியில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவில், சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையத்தின்’ (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளித்து வருகிறது. இந்த கூட்டுமுயற்சி பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 (மணலி மண்டலம்) மற்றும் ‘ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ்’ (Farmers for Forests) என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்த மையம் உள்ளூர் சமூகத்தினர் சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்து அறிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவும். இது இந்தியாவில் அக்சென்ச்சர் மற்றும் ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் மூன்றாவது சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் ஆகும்; முன்னதாக மஞ்சாரில் (புனே மாவட்டம், மகாராஷ்டிரா) 12 ஏக்கர் மையமும், நிருத்யாகிராமில் (பெங்களூரு, கர்நாடகா) 10 ஏக்கர் மையமும் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றாக, இந்த மூன்று மையங்களும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நேரடி சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்புடன் இணைக்கின்றன.


சென்னையின் இந்த முன்முயற்சி, மாசடைந்த ஒரு தொழிற்பேட்டை நிலப்பரப்பை, வாழ்விட மறுஉருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் புனரமைக்கப்பட்ட சதுப்புநிலச் சூழலியல் மண்டலமாக மாற்ற உதவியுள்ளது. சுற்றுச்சூழல் தாங்குதிறனை அதிகரிக்கவும் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் குளங்கள், ஆழமான நீர்நிலைப் பகுதிகள், உபரி நீர் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் வாழ்விட மண்டலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், இப்பகுதி 19,000-க்கும் மேற்பட்ட பூர்வீக மரங்கள் மற்றும் புதர்களின் தாயகமாக மாறுவதுடன், பறவைகள், மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் சதுப்புநிலத்தைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களின் வளமான பல்லுயிர்ச் சூழலுக்கு ஆதரவளிக்கும்.


இந்த மையம் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக வழிகாட்டிகள் உடனான இயற்கைச் சுற்றுலா, பறவைகளைப் பார்த்தல், நீடிப்புத்தன்மை குறித்த பயிலரங்குகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வட்டப் பொருளாதார நடைமுறைகள், கழிவு மேலாண்மை, நீடித்த உணவு முறைகள், நீடிப்புத்தன்மையுள்ள வாழ்வியல் போன்ற தலைப்புகளில் நேரடிச் செயல்விளக்கங்களை நடத்தும். பார்வையாளர்கள் மரம் நடுதல், பல்லுயிர்ப்பெருக்க கண்காணிப்பு, எரு உரம் தயாரித்தல், பெர்மாகல்ச்சர் தோட்டம் அமைத்தல், பூர்வீக நாணல் புற்களை நடுதல், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுதல், உள்ளூர் விலங்கினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் போன்ற சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளிலும் பங்கேற்கலாம். சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்த மையம், மழைநீர் சேகரிப்பு மற்றும் மண் பாதுகாப்பு நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.


சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்தியாவில் அக்சென்ச்சர் ஆதரவளிக்கும் ஏற்கனவே உள்ள இரண்டு சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையங்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 15,000 பள்ளி மாணவர்கள், உள்ளூர் சமூக உறுப்பினர்கள், அக்சென்ச்சர் ஊழியர்கள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் மஞ்சார் (புனே மாவட்டம்) மற்றும் நிருத்யாகிராம் (பெங்களூரு) மையங்களைப் பார்வையிட்டுள்ளனர். மஞ்சார் மற்றும் பெங்களூரு மையங்கள் இணைந்து, 27,000-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் தாயகமாக விளங்குகின்றன.




மேற்கோள்கள்:


இந்தியாவில் உள்ள அக்சென்ச்சரின் சீனியர் கண்ட்ரி மேனேஜிங் டைரக்டர் அஜய் விஜ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “அக்சென்ச்சரில், பொறுப்பு மேலாண்மை என்பது நமது மக்கள், சமூகங்கள் மற்றும் பூமியின் மீதான நமது கடமையில் வேரூன்றியுள்ளது. கல்வியும் பங்களிப்பும் விழிப்புணர்வைச் செயல்பாடாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் நீடிப்புத்தன்மையை நேரடியாக அனுபவித்து உணர உதவுவதன் மூலம், சிறந்த புரிதலை உருவாக்கவும், அடுத்த தலைமுறையினரை சுற்றுச்சூழல் பொறுப்பை ஏற்க ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”


அக்சென்ச்சரின் கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் – லீட், ஆசிய பசிபிக், மனிஷா பட்டாச்சார்யா அவர்கள் இவ்வாறு கூறினார், “புனே மாவட்டத்தின் மஞ்சார் மற்றும் பெங்களூருவின் நிருத்யாகிராமில் இருந்து சென்னையின் புதிய சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் வரை, இந்த இடங்கள் அந்தந்த சமூகங்களின் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளில் வேரூன்றி, நீடிப்புத்தன்மையை உணரக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுகின்றன. உள்ளூர் சமூகங்கள் இந்த மையங்களில் இருந்து கற்றுக்கொள்வது போலவே, பல்லுயிர்ப்பெருக்கக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றுக்குப் பங்களிக்கவும் செய்கின்றன. இது காலப்போக்கில் இந்த இடங்கள் வளர்ச்சியடையவும் செழிக்கவும் உதவுகிறது.”.


கருத்துகள் இல்லை