சற்று முன்



எப்படி இருக்கிறது சசி குமாரின் ‘காரி’ – விமர்சனம் !

 


இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காரி. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற படம் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று வெளியாகி இருக்கும் காரி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அரசாங்கம் அந்த ஊரை குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது. இதனால் இந்த ஊர் மக்கள் கொந்தளித்து போய் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், சசிகுமார் தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறார். இவர் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகிறார்

மறுபக்கம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை கார்ப்பரேட் வில்லன் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரே இடத்தில் சேருகிறது. இந்த அரசாங்க பிரச்சனையிலும், கார்ப்பரேட் வில்லனிடமும் சசிகுமார் எப்படி மாட்டினார்? இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டாரா? மக்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஆற்றலை சசிகுமார் திறமையாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

படம் முழுக்க நகைச்சுவை இல்லை என்றாலும் எமோஷனல் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகுமார். குறிப்பாக, காளை மாட்டை வைத்து வரும் காட்சிகள் எல்லாம் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.கதாநாயகியாக வரும் பார்வதி அருண் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவரை தொடர்ந்து அப்பாவாக பாலாஜி சக்திவேல் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இயக்குனர் மண்வாசம் மாறாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும், மக்களின் நிலைமையும் அழகாக சொல்லி இருக்கிறார். இதற்கு பக்கபலமாக இமானின் பின்னணி இசை இருந்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் காரி படம் நன்றாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் மையக்கருவும், அதை படமாக்கிய விதமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் வலு சேர்த்திருக்கிறது. 

Rating  -  3.5 / 5



கருத்துகள் இல்லை